Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: டாஸ்மாக் கடைகளில் இளைஞர், முதியோர் மது வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் கடந்த 45 நாட்களாக டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடியே இருந்தன. இந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் கடைகள், தொழில்கள் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அது போல் டாஸ்மாக் கடைகளுக்கும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து புதுடெல்லி, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, சண்டிகார் உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டன. அது போல் நம் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் நாளை 7ம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயக்கப்பட வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகள் போடப்பட்டன. குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படும் என திருப்பூர் ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் கூட்டம் கூடியதை போல் டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் கூடினால் அடுத்தது கொரோனா பரப்பும் இடமாக டாஸ்மாக் கடைகள் மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். 45 நாட்களுக்கு பிறகு இன்று மதுக்கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு டாஸ்மாக் முன்பும் 2 போலீசார் நிற்க போலீஸ் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
மது வாங்குவதற்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு:
50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மதுபானங்களை வாங்கலாம். அது போல் 40-50 வயதிற்குள் உள்ளவர்கள் பகல் 1 மணி முதல் 3 மணி வரையும், 40- வயதிற்குள்ளவர்கள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் மது வாங்கிக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. அதாவது முதியவர்களுக்கு காலையிலும், இளைஞர்களுக்கு மாலையிலும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.